தொடுப்புகளைத் தொகு
இந்த சப்பானிய வரைபடத்தில் உள்ளதுபோல் நாட்டார் கதைகளில் இயற்கையில் காணப்படாத புனைவு உயிர்களும் பேய்களும் மிகுதியாக உள்ளன.

நாட்டார் வழக்காற்றியல், நாட்டாரியல் அல்லது நாட்டுப்புறவியல் (folklore) என்பது நாட்டார் மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள், சடங்குகள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். நாட்டார் வழக்காற்றியல் வாய்மொழி இலக்கியம், பொருள்சார் பண்பாடு, நாட்டார் நிகழ்த்து கலைகள், நாட்டார் சமயம், சடங்கு மற்றும் நம்பிக்கைகள் என நான்கு வகைப்படும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டார் வழக்காற்றியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டார் வழக்காற்றியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். பேராசிரியர் நா. வானமாமலை நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.[சான்று தேவை]

நாட்டார் வழக்காற்றியலில் இன்றைய ஆய்வுகள் பெரிதும் விரிவடைந்து நாட்டார் வழக்காற்றியல் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும் கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாட்டார் மருத்துவம், நாட்டார் கட்டடக்கலை போன்றனவும் இவற்றுள் அடக்கம்.